பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் துணை தாசில்தார், வி.ஏ.ஓ., கைது
ஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா பள்ளப்பாளையம் 'அ' கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். பட்டா மாறுதலுக்காக பள்ளப்பாளையம் வி.ஏ.ஓ., சரத்குமாரிடம் விண்ணப்பித்தார். இதற்காக, 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத தனசேகரன், ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.,ராஜேஷிடம் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய,15,000 ரூபாயை, வி.ஏ.ஓ., சரத்குமாரிடம் நேற்று கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதில் தொடர்புடைய பெருந்துறை மண்டல துணை தாசில்தார் நல்லசிவத்தையும் கைது செய்தனர்.