மரங்களில் புரியாத குறியீடு, எழுத்துகள் தீர்த்தமலை வனத்தில் மர்ம நபர்கள் நடமாட்டமா
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் வருவாய்கோட்டத்தில், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அரூர் என, 4 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள காடுகளில், மான், காட்டுப்பன்றி, முயல், காட்டெருமை அதிகளவில் உள்ளன. இவை நாட்டுத்துப்பாக்கியால் வேட்டையாடும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை வனத்துறையினரும், போலீசாரும் கண்டுகொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தீர்த்தமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழானுார், பொய்யப்பட்டி, தீர்த்தமலையிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட மரங்களில் புரியாத மொழியில், குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.கடந்த காலங்களில், தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் நக்சல் இயக்கங்களின் செயல்பாடு அதிகமாக இருந்தது. அரசும், போலீசாரும் எடுத்த நடவடிக்கையால் நக்சல் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, தீர்த்தமலை வனச்சரக மரங்களில், குறியீடுகள், எழுத்துக்கள் பொறித்துள்ளதால், மர்ம நபர்களின் நடமாட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்து தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில், ''வனப்பகுதிக்கு சென்று பார்வையிட்டதில், அவை படிக்க தெரியாதவர்கள் எழுதியதை போல் உள்ளது. எஸ்.டி.எப்.,ஐ பார்க்க சொல்லியுள்ளேன். யார் எழுதினார்கள் என தெரியவில்லை. ஊஞ்சை, பொரிசு உள்ளிட்ட விறகு வகையை சேர்ந்த, 42 மரங்களில் எழுதப்பட்டுள்ளது. தீவிரவாத குழுக்கள் எழுத வாய்ப்பில்லை,'' என்றார்.