உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் மகா தரிசனம் கோலாகலம்

சென்னிமலையில் மகா தரிசனம் கோலாகலம்

சென்னிமலை:சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான மகா தரிசனம், வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. விடியவிடிய நடந்த நிகழ்வில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த மாதம், 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் நடந்தது. விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.முன்னதாக காலை, 10:௦௦ மணிக்கு கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமிக்கு மகா சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து மலர் அபிஷேகம் நடந்தது. இதில், 6 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு, 8:30 மணிக்கு நடராஜ பெருமானும், தம்பதி சமேத சுப்பிரமணிய சுவாமியும், முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திரு வீதியுலா வந்தனர். அதிகாலை வரை நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்த சுவாமிகளை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் சென்னிமலை நகரே விழாக்கோலம் பூண்டது. அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்கு சுவாமிகள் கொண்டு செல்லப்பட்டன. மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் தேர்திருவிழா, இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி