உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீபாவளிக்கு பிறகு உயர்ந்த மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000க்கு மேல் உயர்வு

தீபாவளிக்கு பிறகு உயர்ந்த மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000க்கு மேல் உயர்வு

ஈரோடு:உள் நாட்டு தேவை, விற்பனையும் அதிகரிப்பால், 15 நாட்களுக்குள், குவிண்டால் மஞ்சள், 1,000 ரூபாய்க்கு மேல் ஈரோட்டில் விலை உயர்ந்துள்ளது.இதுபற்றி ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு பகுதியில், 4 மார்க்கெட்டில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது. தீபாவளிக்கு பிறகு கடந்த, 23ல் மஞ்சள் ஏலம் துவங்கியபோது, ஒரு குவிண்டால் விரலி, 9,500 - 13,900 ரூபாய்; கிழங்கு, 7,900 - 12,700 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் விரலி, 8,369 - 15,119 ரூபாய், கிழங்கு, 8,099 - 13,888 ரூபாய்க்கும் என குவிண்டாலுக்கு, 1,000 முதல், 1,200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.புதிய மஞ்சள் அறுவடை சீசனுக்கு பின் கடந்த, 3, 4 மாதமாக மஞ்சளை வியாபாரிகள் வாங்கி இருப்பு வைத்தது குறைந்தது. தற்போது இருப்பு இல்லை என்பதால் அதிகமாக வாங்குகின்றனர். விற்பனை தேவை, வழக்கம்போல கடந்த மூன்றாண்டாக ஏற்றுமதி, 10 முதல், 15 சதவீதம் உயர்வு, மஹராஷ்டிரா, நிஜாமாபாத், ஆந்திரா போன்ற இடங்களில் மழையால் மஞ்சள் பாதிப்பு போன்ற காரணத்தால் தற்போது விற்பனை அதிகமாகி, குவிண்டாலுக்கு, 1,000 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது.கடந்த சில ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு தேசிய அளவில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. ஆனால், மஹராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே அதிகமாக பெய்து, வடகிழங்கு பருவமழையும் தொடர்ந்ததால், தற்போது பயிர் செய்துள்ள மஞ்சளும் அதிகம் பாதிக்கும் அச்சம் உள்ளது. அவ்வாறு பாதித்தால் வரத்து, தரம் குறையலாம். எனவே வியாபாரிகள் தரமான மஞ்சளை வாங்கி இருப்பு வைப்பதால் விலை உயர்கிறது. மழைக்கு பின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதற்கு ஏற்ப, வரும் நாட்களில் மஞ்சள் விலை மாறுபடும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி