ஹவுஸ் ஓனர் வீட்டில் திருடிய பெண் கைது
ஈரோடு, ஈரோடு, சாஸ்திரி நகர், சடையம்பாளையம் சாலையை சேர்ந்தவர் ஜெயகுமார், 55; அரசு பஸ் கன்டக்டர். மனைவி கார்மென்ட்ஸ் டெய்லர். வீட்டின் கீழ் பகுதியை வாடகைக்கு விட்டு, முதல் தளத்தில் இளைய மகள், மனைவியுடன் வசிக்கிறார். வீட்டின் சாவியை மூவரும் தனித்தனியாக வைத்துள்ளனர். இதில் ஜெயகுமாரின் சாவி, சில மாதம் முன் காணாமல் போனது. கீழ் வீட்டில் சக்திவேல் மனைவி மணிமேகலை, 28, குழந்தையுடன் வசித்து வருகிறார்.கடந்த, 2ல் ஜெயகுமாரும், ரேவதியும் வேலைக்கு சென்றனர். மாலையில் வந்த ரேவதி, பீரோவில் துணி எடுக்க திறந்தபோது பொருட்கள் கலைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த, 15 பவுன் நகை, 7,500 ரூபாய் திருட்டு போயிருந்தது. சூரம்பட்டி போலீஸில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் ஜெயகுமார் தவற விட்ட சாவியை எடுத்த மணிமேகலை, வீட்டில் யாரும் இல்லாதபோது, பூட்டை திறந்து நகை, பணம் திருடியதை ஒப்பு கொண்டார். மணிமேகலையை போலீசார் கைது செய்து, 15 பவுன் நகையை மீட்டனர்.