ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் 44 மரங்களை வெட்டி அகற்றும் பணி துவக்கம்
ஈரோடு :ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட வசதியாக, 44 மரங்களை வெட்டி அகற்றும் பணி நேற்று துவங்கியது.ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில், ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக கூடுதல் கட்டடம் கட்ட, தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் கட்டடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த மரங்களை வெட்டி, அகற்றி கொள்வதற்கான ஏலம் சில தினங்களுக்கு முன் விடப்பட்டது. முறையாக அனுமதி பெற்று, 44 மரங்களை வெட்டி அகற்றி கொடுக்க ஏலதாரர் முன் வந்தார்.இதன்படி நேற்று காலை, எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட உள்ள இடத்தில் இருந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி துவங்கியது. இப்பணி ஓரிரு நாட்களில் நிறைவு பெற உள்ளது. மரம் வெட்டும் பணி நடக்கும் பகுதியில் பொதுமக்கள், போலீசார் யாரும் செல்லாமல் இருக்கும் விதமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மரம் வெட்டும் பணியை எஸ்.பி., சுஜாதா பார்வையிட்டார்.