அரசு பள்ளி கதவை உடைத்து சமூக விரோதிகள் அடாவடி
கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளியின் கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஈய்யனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிபவர் முத்துக்குமார். இவர் கடந்த 6ம் தேதி மாலை 6:00 மணியளவில் வழக்கம் போல் பள்ளியை பூட்டி விட்டு சென்றார். இருநாட்கள் விடுமுறை கழித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வந்து பள்ளியை திறந்தார்.மர்ம நபர்கள் சிலர் சுற்று சுவர் ஏறி குதித்து, வகுப்பறையின் கதவை உடைத்து மேஜை, பிளாஸ்டிக் நாற்காலிகள் உள்ளிட்ட உபகரண பொருட்களை சேதப்படுத்தி, இரண்டு நாற்காலிகளை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. சாதி குறித்த வாசகம் மற்றும் ஒரு அரசியல் கட்சியின் கொடியை வரைந்து சென்றுள்ளனர்.தலைமையாசிரியர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.