திருக்கோவிலுார் கல்லுாரிக்குள் புகுந்து மாணவனை தாக்கிய கும்பலால் பரபரப்பு
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். திருக்கோவிலுார், தாசர்புரம், அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல் மகன் பார்த்தசாரதி,19; சந்தப்பேட்டையில் உள்ள திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை 3:15 மணிக்கு பார்த்தசாரதி வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது, முன்னாள் மாணவர் சந்தர்ப்பேட்டை ராமச்சந்திரன் மகன் யுவராஜ், 22; அவரது ஆதரவாளர்கள் விநாயகம் மகன் ஆகாஷ், 22; மற்றும் சிலர் தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வகுப்பறைக்குள் நுழைந்து பார்த்தசாரதியை சரமாரியாக தாக்கினர். பார்த்தசாரதி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்து சக கல்லுாரி மாணவர்கள் சிதறி ஓடினர். இதனால் கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பார்த்தசாரதியை உடனடியாக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் யுவராஜ், ஆகாஷ் மற்றும் அடையாளம் தெரிந்த மற்றும் பெயர் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.