| ADDED : பிப் 21, 2024 10:24 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மழலையர் பள்ளியில் உலக தாய் மொழி தினத்தையொட்டி மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அண்ணா நகர் ஏ.கே.டி., நினைவு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் உலக தாய் மொழி தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பரிதாபானு வரவேற்றார். விழாவில் 24 மாணவர்கள் 2024ம் ஆண்டையொட்டி 2024 முறை உலக தாய்மொழி தினம் என்று எழுதி சாதனை செய்தனர். அதேபோல் மூன்றாம் வகுப்பு மாணவி அக்ஷிதா 20 நிமிடம் இடைவிடாமல் கட்டைக்கால் நடனம் ஆடினார். மேலும், எல்.கே.ஜி., பயிலும் மூன்று வயது மாணவன் ஸ்ரீஅஜீஸ் தனது சக வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் என மொத்தம் 50 பெயர்களை ஒரு மணி நேரத்திற்குள் எழுதி சாதனை செய்தார்.மழலையர் பள்ளி மாணவர்களின் சாதனை நிகழ்வுகளை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை நிகழ்வாக பதிவு செய்தனர். விழாவில் பள்ளியின் மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகாசலம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.