அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.4.60 கோடிக்கு வர்த்தகம்
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கடந்த 5 நாட்களில் 4.60 கோடி ரூபாய் வர்த்தகமானது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வரும் கமிட்டியில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி முன்னிலை வகித்து வருகிறது. தற்பொழுது மக்காச்சோள அறுவடை தீவிரமடைந்திருக்கும் சூழலில், பருவ மழையும் பெய்து வருவதால், அறுவடை பணி பெருமளவில் பாதித்துள்ளது. எனினும் கடந்த 5 நாட்களில் மட்டும் 13,450 மூட்டை மக்காச்சோளம் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்தும் விளை பொருட்கள் கொண்டுவரப்படுகிறது. இ.நாம் மற்றும் நேரடி ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பங்கேற்பதால் அதிக விலை, நம்பகத்தன்மை காரணமாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஆர்வமுடன் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1890 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் இங்கு ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 4.60 கோடி ரூபாய் வர்த்தம் நடந்தது.