ஜாமினில் எடுப்பதாக கூறி ரூ.7.21 லட்சம் ஏமாற்றிய வழக்கறிஞர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வஹாப் நகரைச் சேர்ந்தவர் ராஜாராம் மனைவி அறிவுச்செல்வி. இவர் கடந்த 2021ம் ஆண்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பணிபுரிந்தபோது, பண மோசடி நடந்ததாக அறிவுச்செல்வி, அவரது மகன் வரதராஜன் ஆகியோரை விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது வரதராஜன் மனைவி சரண்யாதேவியிடம் அறிமுகமாகிய கள்ளக்குறிச்சி சீத்தாராம் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் உதயஆதித்தன், இருவரையும் ஜாமினில் எடுப்பதாக கூறி பல தவணைகளாக வெவ்வேறு வங்கி கணக்குகளில் 8 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், ஜாமினில் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் தனது உறவினர் மூலம் ஜாமினில் வெளியே வந்த வரதராஜன், தனது மனைவியிடம் பணம் பெற்று ஏமாற்றியது குறித்து வழக்கறிஞர் உதயஆதித்தனிடம் கேட்டுள்ளார். பணத்தை திருப்பித் தந்து விடுவதாகக் கூறி, ரூ.1.50 லட்சம் மட்டும் கொடுத்தவர், மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக வரதராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயஆதித்தன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி மனு செய்தார். தொடர்ந்து, ஐகோர்ட் உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார், உதயஆதித்தன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.