ஏரி மதகு உடைப்பு ஒருவர் மீது வழக்கு..
கள்ளக்குறிச்சி:ஆலத்துாரில் மீன் பிடிப்பதற்காக ஏரி மதகின் கதவை உடைத்து தண்ணீரை வெளியேற்றியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில், மீன் வளர்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார்,60; என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில், அவர் மீன் பிடிப்பதற்காக ஏரி மதகின் கதவை உடைத்து, தண்ணீரை வெளியேற்றியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், கள்ளக்குறிச்சி நீர்வளத்துறை உதவி பொறியாளர் விஜயகுமரன் ஆலத்துார் ஏரிக்கு சென்று ஆய்வு செய்தார். அதில் மதகின் இரும்பு கதவு உடைக்கப்பட்டிருப்பதும், அதிகளவு தண்ணீர் வெளியேறியதும் தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.