| ADDED : டிச 27, 2025 06:48 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த கலெக்டர் அலுவலகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகள் துவக்க விழா மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய திட்ட அறிவுப்புகளை வெளியிட்டார். ● ரிஷிவந்தியம் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையின் படி வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும். மேலும், ரிஷிவந்தியத்தில் 6 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டப்படும். ● புதியதாக அமைக்கப்பட்டுள்ள உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு ரூ.18 கோடி மதிப்பில் புதிய கல்லுாரி கட்டடம் அமைக்கப்படும். ● உளுந்துார்பேட்டை வட்டத்தில் உள்ள சேந்தநாடு கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும். ● சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்கு பயனளிக்கின்ற வகையில், புதுப்பாலப்பட்டு கிராமத்தில் ரூ.18 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ● சின்னசேலம் வட்டத்தில் 3 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டடம் கட்டப்படும். ● ரி ஷிவந்தியம் தொகுதி, திருக்கோவிலுார் பகுதி விவசாயிகளின் நலனுக்காக, ஜி.அரியூர் கிராமத்தில் ரூ.5 கோடியே 4 லட்சம் மதிப்பில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். ● கல்வராயன்மலை பகுதி பழங்குடியினர் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் விரிவுப்படுத்தப்படும். ● புதியதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 120 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்படும்.