குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள கடைகளில், குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா தலைமையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நகர பகுதியில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், நகர பகுதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடை மற்றும் வாகன பழுதுபார்ப்பு கடைகளில், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு நடந்தது.இதில், கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என கண்டறியப்பட்டது. தொடர்ந்து, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம்; அவ்வாறு பணியில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; என அறிவுரை வழங்கப்பட்டது. ஆய்வின் போது சப் இன்ஸ்பெக்டர் பைசுல்லா, பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுனர் பெரியசாமி, வி.ஏ.ஓ., தெய்வீகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.