| ADDED : ஜன 19, 2024 07:28 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெறும் பகுதிகளில் வளர்ந்துள்ள நாணல் புதர்களை பா.ஜ., வினர் சொந்த செலவில் அகற்றினர்.திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் ஆண்டு தோறும் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். அப்போது, இரட்டை விநாயகர், கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர், வீரபாண்டி அதுல்ய நாதீஸ்வரர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி வைபவம் நடைபெறும்.இதனைக் காண விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கூடுவர்.விழா நடைபெறும் இடத்தில் நாணல் புதர்கள் மண்டிக்கிடப்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடும். இதனால், நாணல் புதர்களை அகற்ற வேண்டும் என பா.ஜ., மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவின் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனர். இன்று விழா நடைபெறும் நிலையில், நேற்று வரை பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில், சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நாணல் புதர்களை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்.நகர தலைவர் பத்ரிநாராயணன், தரவு மேலாண்மை பிரிவு மாநிலச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்டத் துணைத் தலைவர் வசந்த், மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி உடனிருந்தனர்.