அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களுக்கு கலெக்டர் அழைப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுடைய குழந்தைகளை, அங்கன்வாடி மையத்தில் சேர்க்கும்படி பெற்றோர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் 1,162 குழந்தைகள் மையங்கள் செயல்படுகிறது. இங்கு சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி கற்பிக்கப்படுகிறது.குறிப்பாக 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செய்கைப் பாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் ஆகியவை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி, விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.குழந்தைகள் மைய அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தை சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.பெற்றோர்கள் தவறாமல் தங்களது குழந்தைகளை மையத்தில் வரும் ஜூன் மாதத்தில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.