அரசு பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கு தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கடந்த ஆக., மாதம் நடந்தது. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னேசலம், எலவனாசூர்கோட்டை, திருக்கோவிலுார் ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி விளையாட்டு மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சதுரங்கம், கால்பந்து, இறகுபந்து கைபந்து, கோ-கோ, டென்னிஸ், ஹாக்கி, வாலிபால், கபடி, பேஸ்கட்பால், டேபிள் டென்னிஸ் மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.எலவனாசூர்கோட்டை விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பேட்மிட்டன், எரிபந்து விளையாட்டு போட்டி நடந்தது.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.