மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 12 போலி டாக்டர்கள்
14-Feb-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் விடுதி கட்டடங்களில் 'மொபைல் நெட்வொர்க்' பிரச்னையால் டாக்டர்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் குடியிருப்பு, கல்லுாரி மாணவர்கள் விடுதி கட்டடங்களில் மொபைல் நெட்வொர்க் முற்றிலும் கிடைப்பதில்லை. பாதிப்பு
இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள், அவசர நேரங்களில் கூட அவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு டாக்டர்கள் கூட ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. கட்டடத்தின் ஜன்னல் ஓரங்களில் சென்றால் மட்டுமே பேசக்கூடிய நிலை உள்ளது. அதேபோல் மருத்துவமனைக்கு எதிரே மருத்துவ பேராசிரியர்களுக்கான குடியிருப்பு மற்றும் கல்லுாரி மாணவ-மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. அங்கேயும் மொபைல் நெட்வொர்க் பிரச்சனையால் டாக்டர்கள், மற்றும் கல்லுாரி மாணவ-மாணவியர் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள் வெளியே சென்றால், அவசரத்திற்கு அவர்களை கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உள்ளே அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிகள் நிலைகள் குறித்து, உடன் இருப்போர் வெளியே வந்து தெரிவிக்கும் வரை குடும்பத்தினர், உறவினர்கள் திக்.. திக்.. மனநிலையிலேயே உள்ளனர். நடவடிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அரசுத்துறை உயர் அதிகாரிகள், டாக்டர்களிடம் உடனுக்குடன் தகவல்களை கேட்டறிய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மருத்துவமனை கட்டடத்திற்குள் தங்கு தடையின்றி மொபைல் நெட்வொர்க் கிடைக்கும் வகையில் அப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் அல்லது தனியார் நிறுவனத்தின் 'மொபைல் டவர்கள்' அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
14-Feb-2025