கோமுகி அணை நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி! சம்பா சாகுபடிக்கு ஆயத்த பணிகள் துவக்கம்
கச்சிராயபாளையம்: கோமுகி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கச்சிராயபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் அதனை சார்ந்த தொழில்கள் மக்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழில்களையே நம்பி உள்ளனர். இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காசோளம், வாழை போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதரமாக கல்வராயன்மலையின் அடிவராத்தில் அமைந்துள்ள கோமுகி அணை உள்ளது. இந்த அணை 46 அடி (560 மில்லியன் கன அடி ) முழு கொள்ளவு கொண்டது. கோமுகி அணையின் பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை 12 அணை கட்டுகள் உள்ளன. இந்த அணை கட்டுகள் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 43 ஏரிகள் நீராதாரம் பெற்று 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறகின்றன. கோமுகி அணையின் புதிய பாசன திட்டத்தில், அணையிலிருந்து 8 ஆயிரத்தி 917 மீட்டர் துாரம் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் மூலம் கச்சிராயபாளையம், வடக்கனந்தல், மாத்துார், மண்மலை, கரடிசித்துார், தாவடிப்பட்டு, செல்லம்பட்டு, மாதவச்சேரி, சிவகங்கை உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. கச்சிராயபாளையம் பகுதியில் கிணற்று பாசன விவசாயிகள் சம்பா, ஆனிகார், மாசிகார் என மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கிணறு இல்லாத விவசாயிகள் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு போகம், சம்பா சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து பிப்ரவரி இறுதி வரை 5 மாதங்களுக்கு சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சம்பா சாகுபடி பருவம் துவங்கிய நிலையில் கிணற்று பாசன விவசாயிகள் மட்டுமே உழவு பணிகளை மேற்கொண்டனர். கோமுகி அணையின் நீர்மட்டம் உயராமல் 32 அடிக்கும் குறைவாகவே இருந்து வந்தது. அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் தேதி முடிந்து 20 நாட்கள் ஆகியும் அணையின் நீர் மட்டம் உயராமல் இருந்து வந்தது. இதனால் கோமுகி அணையை நம்பியுள்ள பாசன விவசாயிகள் பருவம மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலையில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை கோமுகி அணை பகுதியில் 53 மி.மீ., மழை பதிவாகியது. கல்வராயன் மலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக கல்வராயன் மலையில் உற்பத்தி ஆகும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம் உள்ளிட்ட 3 ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 454 மில்லியன் கன அடி நீர் வர துவங்கியுள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் கனிசமாக உயர்ந்து முழு கொள்ளவான 46 அடியில் தற்போது 41 அடி (364.30 மில்லியன் கன அடி) ஆக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது கனிசமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.