உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாத்தனுார் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்: விவசாயிகள் அதிருப்தி

சாத்தனுார் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்: விவசாயிகள் அதிருப்தி

திருக்கோவிலுார் : சாத்தனூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருக்கோவிலுார் அணைக்கட்டிற்கு குறைவான அளவில் வந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.திருக்கோவிலுார் அணைக்கட்டின், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் உரிமை நீராக இரண்டாம் போக சாகுபடிக்கு கடந்த, 16ம் தேதி சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.கடந்த, 17ம் தேதி, 650 கன அடி அளவிற்கு மட்டுமே அணைக்கட்டிற்கு தண்ணீர் வந்ததால், ராகவன் வாய்க்காலில், 200 கன அடி, பம்பை வாய்க்காலில் 200 கன அடி, மலட்டாற்றில் 250 கன அடி வீதம் திருப்பி விடப்பட்டது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், அணையில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்தனர்.சமீபத்தில் பெய்த மழை காரணமாக நீரோட்டம் இருப்பதால் அணையில் திறக்கப்படும் அதே அளவு தண்ணீர் திருக்கோவிலுாரை வந்தடைய வேண்டும். அதனால், தண்ணீர் குறைவதற்கான காரணம் குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதிகாரிகள் ஆய்வை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணி அளவில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ராகவன் வாய்க்காலில் 320 கன அடி நீர், மலட்டாற்றில் 300 கன அடி நீர், பம்பை வாய்க்காலில் 235 கன அடி நீர், சித்தலிங்கமடம் வாய்க்காலில் 15 கன அடி நீர் என 870 கன அடி நீர் பிரித்து விடப்பட்டது.சாத்தனுார் அணையில் திறக்கப்படும் தண்ணீர், 8 கி.மீ., தூரத்தில் இருக்கும் பிக்கெப் அணைக்கட்டில் இருந்து வலதுபுற கால்வாய், இடதுபுற கால்வாய், தென்பெண்ணை ஆறு என 3 பிரிவுகளாக பிரித்து விடப்படுகிறது. இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறுகையில், 'வினாடிக்கு, 900 கன அடி வீதம் வரும் ஏப்., முதல் தேதி வரை மொத்தம் 1,200 மில்லியன் கன அடி நீர் உபரி நீராக தென்பெண்ணை ஆற்றில் திறக்க வேண்டும். இந்நிலையில் நீரின் அளவு குறைந்ததற்கான காரணம் குறித்தும், இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை