அரிசி ஆலை ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அரசி ஆலை ஊழியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலக தொழிலாளர்களை தேடி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதையொட்டி, கள்ளக்குறிச்சி, பெருவங்கூர் பெரியாயி நவீன அரிசி ஆலையில் நடந்த மருத்துவ முகாமில் மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக்குழு டாக்டர் காந்திமதி தலைமையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.அரிசி ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயரம், எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு, பொது மருத்துவத்திற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில் 18 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 31 பேர் கலந்து கொண்டனர்.இதில் தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து நலக்கல்வி அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் பிரவீன் ஆகியோர் செய்திருந்தனர். செவிலியர்கள் தேன்மொழி, அஸ்வினி, லேப் டெக்னீசியன் நர்மதாதேவி, ஓட்டுனர் பரணி, பெண் சுகாதார பணியாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.