அரசு பஸ் கண்டெக்டரை தாக்கிய சிறுவர்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 48; அரசு பஸ் கண்டெக்டர். நேற்று முன்தினம் டி.என்.32. என்.4026 என்ற பதிவெண் கொண் ட அரசு பஸ்சில் பணியில் இருந்தார். காலை 8.15 மணிக்கு கொங்கராயபாளையத்தில் பஸ்சில் ஏறிய 17 வயது மாணவரை டிக்கெட் எடுக்குமாறு முருகேசன் கூறினார். இலவச பயண அட்டை வைத்திருப்பதாக மாணவர் தெரிவித்தார். பயண அட்டையை காண்பிக்குமாறு கூறியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் அம்மாணவர் இறங்கினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற பஸ் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேப்பூர் நோக்கி சென்றது. அப்போது கொங்கராயபாளையத்தில் பஸ்சை நிறுத்திய 3 சிறுவர்கள் முருகேசனை திட்டி, தாக்கினர். இது குறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில், 17 வயது சிறுவர்கள் மூவர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.