சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு விரைவு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். வேலுாரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு தமிழ்நாடு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 42 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தன், 38; ஓட்டிச் சென்றார். திருவண்ணாமலை - - திருக்கோவிலுார் சாலையில் சடைகட்டி சாய்பாபா கோவில் அருகே சென்றபோது, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேலுார் பாகாயத்தை சேர்ந்த இளங்கோ, 62; முகமது ரபிக், 51; வேலுார் வில்லுப்பாட்சிபுரம் சுகந்தி, 52; ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த மணலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.