பெண்ணை தாக்கிய வழக்கு; தாத்தா, பேரனுக்கு 18 மாதம் சிறை
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 43; அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 72; இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சுப்ரமணியன், அவரது பேரன்களான பழனி மகன்கள் சுபாஷ், 23; சுதாகர், 20; ஆகியோர், அய்யப்பன் மகளிடம் தகராறு செய்து தாக்கினர். இதனை தட்டிக் கேட்ட அய்யப்பனின் மனைவி அமிர்தம், 37; என்பவரையும் தாக்கினர். புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சுப்ரமணியன், சுபாஷ், சுதாகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை உளுந்துார்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கோமதி, பெண்ணை தாக்கிய சுப்ரமணியன், சுபாஷ் ஆகிய இருவருக்கும் தலா 18 மாதம் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம், சுதாகருக்கு 2,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.