எள் சாகுபடியில் அதிக மகசூல்; வேளாண் அதிகாரி ஆலோசனை
கள்ளக்குறிச்சி; எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருக்கோவிலுார் வேளாண்மை அதிகாரி ஆலோசனை வழங்கி உள்ளார்.திருக்கோவிலுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி செய்திக்குறிப்பு : திருக்கோவிலுார் பகுதியில் எள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற எள்ளில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதன்படி எள் சாகுபடி விவசாயிகள் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். இதன்மூலம் பூச்சி மற்றும் நுாற்புழுக்கள் பெருக்கத்தை குறைக்க முடியும். ஒருமித்த பயிர் விதைப்பு, சரியான விதையளவுகளுடன், சரியான நேரத்தில் பயிரிட வேண்டும். உயிர் உரங்களை எள் விதையுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். வளர் பருவ நிலை புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். அந்துப்பூச்சிகளை கண்காணிக்க விளக்குப் பொறிகளை பயன்படுத்த வேண்டும். பூச்சி தாக்கிய மற்றும் உலர்ந்த மொட்டுகளை அழிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றினால் அதிக மகசூல் பெற முடியும் என வேளாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.