விவசாயியை கொலை செய்த வழக்கு தந்தை, தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே நிலம் தொடர்பான பிரச்னையில் அண்ணனை தாக்கி கொலை செய்த தம்பி குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சண்முகம், 55; விவசாயி. இவருக்கும், இவரது தம்பி பழனிவேல் குடும்பத்தினருக்கும் விளை நிலம் தொடர்பாக பிரச்னை இருந்தது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி விளைநிலத்தில் இருந்த சண்முகத்தை, பழனிவேல் மகன் தேவேந்திரன், இவரது தந்தை பழனிவேல், தாய் செல்வி ஆகிய மூவரும் திட்டி, இரும்பு பைப் மற்றும் தடியால் தாக்கினர். இதில், சண்முகம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். வீட்டிலிருந்த சண்முகத்தின் மனைவி தனலட்சுமியும் தாக்கப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் உயிரிழந்தார். இது குறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், தேவேந்திரன், 25; அவரது தந்தை பழனிவேல், 52; தாய் செல்வி, 46; ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜவேல் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சையத்பர்கதுல்லா, குற்றம் சாட்டப்பட்ட தேவேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், பழனிவேல் மற்றும் செல்வி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித் தார்.