மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
கள்ளக்குறிச்சி: அரியலுாரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் 33 பேர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் விமலக்கண்ணன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல டாக்டர் சிலம்பரசன், கண் டாக்டர் ரேவதி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 100 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை நடத்தினர். அதில், தகுதிவாய்ந்த 33 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை, கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். 8 மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 43 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி பதிவேற்றம் செய்யப்பட்டது.