மேலும் செய்திகள்
ஏரியில் பனை விதை நடும் பணி துவக்கம்
05-Oct-2025
கள்ளக்குறிச்சி : ஏர்வாய்ப்பட்டினம் பெரிய ஏரியில் பனை விதை நடும் பணியை கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர். பசுமைத் தமிழகம் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் பசுமைப் பரப்புகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பனை விதைகள் நடும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், ஏர்வாய்ப்பட்டினம் பெரிய ஏரியில் 5,000 பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியில் பனை விதை நடும் பணிகளை கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 லட்சம் பனை விதைகள் அனைத்து ஏரி, குளங்களில் நடவு செய்து பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பனை விதைகளை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் மூலம் நட்டு வளர்த்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பனை விதைகளை நட்டு வளர்த்து பராமரிக்க முன் வர வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025