விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு ; போலீஸ் விசாரணை
ரிஷிவந்தியம : வாணாபுரம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உள்ளே நுழைந்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வாணாபுரம் அடுத்த நாகல்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை,70; விவசாயி. இவர், தனது மனைவி மணியம்மாள், 65; என்பவருடன் வீட்டில் தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டிற்கு முன்பக்க வாசலில் துாங்கினர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் பின்பக்க தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டிற்கு வெளியே துாங்குபவர்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்காக உள்பக்கமாக பூட்டி விட்டு, பீரோவில் இருந்த பொருட்களை திருடினர். சத்தம் கேட்டு எழுந்த பாவாடை வீட்டின் முன்பக்க கதவினை திறக்க முயற்சித்தார். உள்பக்கமாக தாழ்ப்பால் போடப்பட்டு இருந்ததால், கதவை திறக்க முடியவில்லை.உடன், பாவாடை அருகில் வசிக்கும் தனது மகன் வீரபுத்திரனை அழைத்து வந்து, பின்பக்கமாக வீட்டிற்குள் சென்றார். அதற்குள் பீரோவில் இருந்த தங்க காசு, மூக்குத்தி உட்பட 1.5 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் ஜெய்சங்கர், திருட்டு நடந்த வீட்டிலிருந்த கைரேகை தடயங்களை சேகரித்தார்.