அரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்
ரிஷிவந்தியம்: திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.வாணாபுரம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை நடந்தது. தொடர்ந்து ரங்க நாயகி தாயார், மூலவர் மற்றும் உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். பக்தர்களின் நலனுக்காக சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. மணலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.