ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் உமா மகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ளது. இந்த இடத்தினை தனி நபர்கள் சிலர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டி அனுபவித்து வந்தனர்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு 11ம் தேதி க்குள் இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கடைகள் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை அறநிலைய துறை இணை ஆணையர் ரமேஷ் தலமையில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் 7 வீடுகள் மற்றும் 15 கடைகளை ஜே.சி.பி., மூலம் அகற்றப்பட்டது.