அரசு கல்லுாரி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் அபாயம்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் தற்காலிகமாக இயங்க உள்ள அரசு கல்லூரி வளாகப்பகுதியில் மழைநீர்தேங்கி நிற்பதால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை, சென்னை சாலையில் மார்க்கெட் கமிட்டி அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இடப்பற்றாக்குறையால் திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளி கட்டடம் கட்டப்பட்ட நிலையில், அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது.இதனால் ஏற்கனவே பள்ளி இயங்கிய கட்டடத்தை வட்டார வள மைய அலுவலகமாக மாற்றி பயன்படுத்தி வந்தனர். இந்த வளாகப்பகுதியில் கோ ஆஃப் டெக்ஸ் மற்றும் மின் கட்டணம் செலுத்துவதற்கான பகுதிகள் உருவாக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உளுந்துார்பேட்டைக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அறிவிக்கப்பட்டு, அதை துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏற்கனவே பள்ளி இயங்கி வந்த கட்டட வளாக பகுதியிலேயே தற்காலிகமாக துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்த கட்டடங்களுக்கு வண்ணம் பூசப்பட்டு, புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த லேசான மழைக்கே, கட்டட வளாக பகுதியில் நீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' இந்த கட்டட வளாக பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் வட்டார வள மைய ஆசிரியர்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். கல்லுாரி தற்காலிகமாக செயல்பட அங்கு போதிய கழிவறை வசதிகள் இல்லை.இந்நிலையில் தான் மழைநீர் தேங்கி, தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லுாரி இயங்குவதற்குரிய அடிப்படை வசதிகளையும், தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் போதிய தடுப்பு நடவடிக்கைகளையும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.