நிழற்குடை இல்லாததால் மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி: காரனுார் பஸ்நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் படிக்கின்றனர். கல்லுாரி முடிந்ததும் மாணவர்கள், பிரதான சாலையில் உள்ள காரனுார் பஸ்நிறுத்தத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்திற்கு செல்கின்றனர். அந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு காத்திருக்கும் கல்லுாரி மாணவ-மாணவியர் வெயில் மற்றும் மழையால் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த சில தினங்களுக்கு முன் விரிவாக்க பணிகளின் போது, அங்கிருந்த சாலையோர மரங்களும் அகற்றப்பட்டன. இதனால் நிழலில் ஒதுங்கி நிற்க இடமில்லாமல், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.