உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவது... எப்போது? 14 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் அவலம்

சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவது... எப்போது? 14 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் அவலம்

சின்னசேலம் பகுதியில் ஏற்படும் தீவிபத்துகளை தடுப்பதற்கு, கள்ளக்குறிச்சியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டி இருந்ததால், அதிகளவில் தீ சேதங்கள் ஏற்பட்டு வந்தது.இதனைத் தடுக்கும் விதமாக தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் 16 தீயணைப்பு வீரர்களுடன் சின்னசேலத்தில் கடந்த 2011ம் ஆண்டு புதிய தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது.பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் இந்த தீயணைப்பு நிலையம் வாடகை ஒப்பந்த அடிப்படையில் செயல்பட துவங்கியது. இதனால் இப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகள் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த தீயணைப்பு நிலையம் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான், இதற்கென வாகன கொட்டகை பகுதியில் அரசு ஐ.டி.ஐ., அருகே 33 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஆனால், இந்த இடத்தில் சொந்த கட்டடம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.தற்போது உள்ள வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு போதுமான ஓய்வு அறை, மீட்பு உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் வைப்பதற்கும் இடவசதி இல்லை.தீடீர் தீ விபத்து ஏற்படும்போது வாகனத்தில் தண்ணீர் நிரப்புவதற்கும் போதிய வசதிகள் எதுவும் அங்கு இல்லை. இதனால் இங்கு பணியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர்.மாவட்ட தீயணைப்பு அலுவலகம் கள்ளக்குறிச்சியில் இருந்தும் சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இப்பகுதி மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. எனவே சின்னசேலம் தீயணைப்பு நிலையத்தை சொந்த கட்டடம் கட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !