பைக்கில் தவறி விழுந்த பெண் பரிதாப பலி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் கூலி தொழிலாளி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் சேர்ந்த குமார் மனைவி முனியம்மாள், 50; கட்டட தொழிலாளி. கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த செந்தில்குமார், 46; என்பவர், கட்டட வேலைக்கு முனியம்மாள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி ஆகியோரை தனது பைக்கில் அமர வைத்து கொண்டு, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு, கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் சென்றார். மார்க்கெட் கமிட்டி அருகே பைக் சென்றபோது முனியம்மாள் திடீரென பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த முனியம்மாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து முனியம்மாள் கணவர் குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் பைக்கில் அழைத்து சென்ற செந்தில்குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.