| ADDED : ஜூலை 31, 2024 03:47 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மீண்டும் மஞ்சள் வாரசந்தையை துவக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால், மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பரளவு அதிகரிக்கும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கரும்பு, மக்காசோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல் 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இங்கு சாகுபடி செய்யப்படும் மஞ்சள் சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. சில சமயங்களில் மஞ்சள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம், வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து மஞ்சளை கொள்முதல் செய்கின்றனர். பணப்பயிராக விளங்கும் மஞ்சள் சாகுபடி செய்வதில், விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். பருவ மழை பெய்யாதபோது, கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பயிர் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அத்தருணத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து மஞ்சள் சாகுபடி செய்கின்றனர். சொட்டு நீர் பாசனத்தில் மஞ்சள் சாகுபடி செய்வதில் தண்ணீர் சேமிப்பு மட்டுமின்றி, பயிர்களுக்கு தேவையான நீர் நேரடி பூர்த்தி ஏற்படுவதால் செடிகளும் செழித்து வளரும். பத்து மாத பயிரான மஞ்சள் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்து, ஜனவரி, பிப்., மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அதனை அவியல்போட்டு பதப்படுத்தி விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.வெளி மாவட்டங்களுக்கு மஞ்சள் மூட்டைகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, சந்தையில் திடீரென ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் அவ்வப்போது விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இதனால், தற்போது மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி வார சந்தை நடந்து வருகிறது. அதேபோல் பல ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் வார சந்தையும் துவங்கி ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நடந்தது. ஆனால் வியாபாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மையால் மஞ்சள் வார சந்தை நடத்துவது கைவிடப்பட்டது. இதனையடுத்து மஞ்சள் வியாபாரிகள் வெளியூர்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.இந்நிலையில், வரும் காலங்களில் கள்ளக்குறிச்சியில் மீண்டும் மஞ்சள் வார சந்தையை துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு துவக்கினால் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.