உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டிரைவரை கொலை செய்து லாரியை கடத்தியவருக்கு இரட்டை ஆயுள்

டிரைவரை கொலை செய்து லாரியை கடத்தியவருக்கு இரட்டை ஆயுள்

காஞ்சிபுரம்: டிரைவரை கொலை செய்து, மினிலாரியை கடத்திச் சென்ற வழக்கில், பிரபல வாகன கடத்தல் மன்னனுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.கடந்த 2002 ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் தேதி காலை, காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராம ஏரியில், வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.இதுகுறித்து, பாலுசெட்டி சத்திரம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர், அரக்கோணம் விண்டர் பேட்டை, 2வது தெருவைச் சேர்ந்த ராஜியின் மகன் மணி, 30, என்பதும், அவர் டாடா 407 மினி லாரியை ஓட்டியதும் தெரிய வந்தது.

மேலும், விசாரித்ததில், கடலார் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பிரபல வாகன கடத்தல் மன்னன், அரிகிருஷ்ணன், 55, என்பவர், கூட்டாளிகளுடன், அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டிற்கு, மணியின் லாரியை வாடகை பேசி அழைத்துச் சென்றதும், வழியில், கோவிந்தவாடியில் சிறுநீர் கழிக்க லாரியை நிறுத்தச்சொல்லி மணியை இறக்கி, அவரது கைகளை கட்டிப்போட்டு கொலை செய்துவிட்டு லாரியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அரிகிருஷ்ணன் கும்பலை தேடிவந்தனர். நான்கு மாதங்கள் கழித்து, அவர்கள் லாரிக்கு, அரியானா மாநில பதிவு எண்ணை வைத்து, நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம், 3 லட்சத்திற்கு விற்றது தெரிந்தது. போலீசார் லாரியை கைப்பற்றினர்.

அதன்பின், 2004ம் ஆண்டு, அரிகிருஷ்ணனையும், அவரது கூட்டாளிகள், 8 பேரையும் கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், 2ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சித்தார்த்தர், அரிகிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், மற்றவர்களை விடுவித்தும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் டோமேசன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை