மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சிம்ம வாகனத்தில் உலா
06-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோத்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.இரண்டாம் நாள் உத்சவமான 4ம் தேதி காலை மகர வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதியுலா வந்தார். மூன்றாம் நாளான கடந்த 5ம் தேதி காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும், நான்காம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை தங்க சூரிய பிரபையிலும், இரவு தங்க ஹம்ஸ வாகனத்திலும் உலா வந்தார். ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று காலை தங்க பல்லக்கிலும், இரவு நாக வாகனத்திலும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். ஆறாம் நாள் உற்சவமான இன்று காலை முத்து சப்பரத்திலும், இரவு தங்க கிளி வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வருகிறார். இதில், ஒன்பதாம் நாள், பிரபல உற்சவமான வெள்ளி ரதம் உற்சவம் வரும் 11ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது.ஏற்பாட்டை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்திருந்தனர்.
06-Mar-2025