வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணியர் அவதி
வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளது. வாலாஜாபாத் மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் வருகின்றனர். அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதை, பயணியர் பயன்படுத்தி வந்தனர்.அதன்பின், முறையான பராமரிப்பு இல்லாததால், குடிநீர் தொட்டி பழுதடைந்து, இடிந்து விழுந்தது. இதையடுத்து, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.இதனால், நிலையத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இனி வரும் நாட்கள் கோடைக்காலம் என்பதால், குடிநீர் தேவை அதிகரிக்கும்.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், புதிதாக குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.