அடையாள அட்டை பெற விண்ணப்பித்த விவசாயிகள் 29,732 பேர் வரும் 30ல் இலக்கு நிறைவு செய்ய துறையினர் திட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 47,769 விவசாயிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில், 29,732 நபர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 18,037 நபர்கள், ஏப்.,30ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 1.33 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், 85,000 ஏக்கர் நிலங்களில், நெல், காய்கறி உள்ளிட்ட பல வித பயிர்களை, 65,800 விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இதுபோன்ற விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கவுரவ உதவித்தொகை, மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி மத்திய, மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.மத்திய அரசு வழங்கும், பிரதமர் கவுரவ உதவித்தொகை விவசாயி அல்லாத நபர்களுக்கு சென்றுவிடக்கூடாது என, இணைய வழியில் பதிவு செய்து, மத்திய அரசு கவுரவ நிதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியா வழங்கி வருகிறது.அதேபோல, விதைகள், வேளாண் கருவிகள் என, அனைத்து வித சலுகைகளும் ஆதார் அட்டை, விவசாயிகளின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.இருப்பினும், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளே பயனடைந்து வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாத சிறு, குறு விவசாயிகள் பயன் பெற முடியவில்லை. மேலும், இதுபோன்ற விவசாயிகளுக்கு வங்கி கடனும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.இதை தவிர்க்க, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை, கடந்த பிப்ரவரி மாதம் வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.இதில், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் தொழில்நுட்பத்தினர், உதவி தோட்டக்கலை அலுவலர், மகளிர் குழுவினர் ஆகியோர் தனித்தனியாக வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.இந்த பதிவேற்றத்தின் வாயிலாக, விவசாயிகளின் சுய விபரங்கள் ஒரே அடையாள எண்ணில் பார்த்தால் தெரிந்துவிடும். இந்த அடையாள எண்ணை பயன்படுத்தி மத்திய மற்றும் மாநில அரசு அறிவிக்கும் திட்டங்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள், வேளாண் வங்கி கடன் ஆகியவை பெறலாம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 47,769 விவசாயிகள் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு பதிவேற்றம் செய்ய வேண்டும். இம்மாதம் இறுதி வரையில் கால அவகாசம் உள்ளது.இருப்பினும், வேளாண் துறையினர் 29,732 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். எஞ்சி இருக்கும், 18,037 விவசாயிகள் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளனர்.உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், அதிக விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என, அனைத்து தரப்பினர் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.எனவே, நீட்டித்திருக்கும் கால அவகாசத்தை பயன்படுத்தி, விவசாயிகள் தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் கூறியதாவது:மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்கு, விவசாயிகளின் விபரங்களை வேளாண் துறை அலுவலர்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.விவசாயிகளின் ஆதார் கார்டு, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண் அதிகாரிகள் மற்றும் பொது சேவை மையங்களில் தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.நம் மாவட்டத்தில் எஞ்சி இருக்கும் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்ய, அனைத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
விண்ணப்பித்தவர்கள் விபரம்
ஒன்றியம் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்காதவர்கள்காஞ்சிபுரம் 6,195 2,829வாலாஜாபாத் 6,989 4,447உத்திரமேரூர் 10,018 6,752ஸ்ரீபெரும்புதுார் 4,270 3,043குன்றத்துார் 2,260 966மொத்தம் 29,732 18,037