உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோட்டூரில் தனிநபர் கட்டிய வீடால் பாதையின்றி 50 குடும்பத்தினர் தவிப்பு

கோட்டூரில் தனிநபர் கட்டிய வீடால் பாதையின்றி 50 குடும்பத்தினர் தவிப்பு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கோட்டூர் ஊராட்சி, கலைஞர் நகர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சென்று வந்த சாலையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் வீடு கட்டியதால், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதையின்றி தவித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோட்டூர் ஆலமரத்து விநாயகர் கோவில் அருகே செல்லும் சாலை வழியே சென்று வருகின்றனர். பேருந்து நிறுத்தம், அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இந்த சாலையை பல ஆண்டு களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், சாலை தன் பட்டா இடத்தில் உள்ளதாக கூறி, ஏழு மாதத்திற்கு முன் சாலையை மறித்து வீடு கட்டினார். சாலையின் பெருவாரியான பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டியதால், சாலையின் அகலம் குறைந்து சந்து போல் தற்போது உள்ளது. இதனால், கலைஞர் நகர் பகுதி மக்கள் அந்த சாலையை உபயோகிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், அங்கன்வாடி செல்லும் குழந்தைகள், பெண்கள், வயதானோர் உட்பட அனைவரும் தற்போது, வடக்கு திசையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தின் வழியே, சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது: கலைஞர் நகர் பகுதியில் இருந்து, ஆலமரந்து விநாயகர் கோவில் செல்லும் சாலை வழியாக, மயானத்திற்கு செல்வது வழக்கம். தற்போது, சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியதால், சவ ஊர்வலம் எடுத்து செல்ல வழி இல்லை. தனியாருக்கு சொந்தமான இடத்தின் வழியே செல்ல அனுமதி பெற்ற பின்னரே கொண்டு செல்லப்படுகிறது. அதுவே, 1 கி.மீ., சுற்றி கொண்டு சென்று வருகின்றோம். இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சாலையை அளவீடு செய்து, நிரந்தரமாக சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலை வசதி கேட்டு இதுவரை எந்த மனுவும் வரவில்லை. பிரச்னை இருப்பில், கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

வழியில்லாததால் கடை வருவதற்கு தடை

கலைஞர் நகரில் மட்டும் 150க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்க, 2 கி.மீ., எடையார்பாக்கம் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று, பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள், வயதானோர் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். ரேஷன் கடை அமைக்க மனு கொடுத்தால், தங்கள் பகுதிக்கு ரேஷன் பொருட்கள் கொண்டு வர வழி இல்லை என, கூறுகின்றனர். வழி இல்லாததால், தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை வருது தடைப்படுகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மிரட்டல்

கலைஞர் நகர் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்த கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வரும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்களை மீறி, நீங்கள் எங்கு மனு கொடுத்தாலும் எடுபடாது. தொடர்ந்து இது போன்று ஈடுபட்டால், உங்களை அனைவரையும் துாக்கி உள்ளே வைத்து விடுவேன் என, மிரட்டல் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ