மாணவர்களுக்கிடையே தகராறு ஒருவர் மீது கம்பியால் தாக்குதல்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுாகா, மானாம்பதி கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பிளஸ் 2 படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே, இருக்கையில் அமர்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, இரண்டு மாணவர்களும் அருகில் உள்ள பூங்காவில் சந்தித்து பேசினர். அப்போது, ஒரு மாணவர் தன் நண்பர்களை வரவழைத்து, சக மாணவரை தாக்கினார். இதையடுத்து அந்த மாணவர் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து, எதிர் தரப்பு மாணவரின் கழுத்தில் தாக்கினார். அதில், மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்த மாணவரை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பெருநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.