பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த நிறுவனத்திற்கு விருது
காஞ்சிபுரம், பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த நிறுவனத்திற்கு விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, கலெக்டர் தெரிவித்தார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திகுறிப்பு:சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், நடப்பாண்டு சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.விருது பெற விரும்புவோர், தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.மேலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.விருது பெறுவதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின், ஜூன் 12க்குள் https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அதற்கான கருத்துருவை, காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விண்ணப்பித்து மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை கட்டடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் சமர்பிக்குமாறு, கலெக்டர் கலைச்செல்வி, தெரிவித்தார்.