காஞ்சியில் துாய்மை இயக்கம் 2.0 திட்டம் துவக்கம் தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி தீவிரம்
காஞ்சிபுரம்:துாய்மை இயக்கம் 2.0 திட்டத்தின்கீழ், அரசு அலுவலகங்களில், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியை, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் துாய்மை இயக்கம் 2.0 திட்டத்தின்கீழ் கழிவு சேகரிக்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் அலுவலகங்களை துாய்மையாக வைத்துக் கொள்ளும் உறுதிமொழியை அரசு அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கிவரும் அலுவலகங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மின்னணு கழிவு பொருட்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். துாய்மை பணியாளர்களுக்கு, கலெக்டர் கலைச்செல்வி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.