கழிப்பறைக்கு பதிலாக சமையலறை மாநகராட்சி கட்டியதால் சர்ச்சை
காஞ்சிபுரம்: மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைக்கு டெண்டர் விடப்பட்டு, சமையலறை கட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானத்தை தள்ளி வைக்கும்படி, மாநகராட்சி கமிஷனரிடம், கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்புசா மி மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், கே.வி.கே., மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் கழிப்பறை கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 5.8 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு பள்ளிகளிலும் கழிப்பறை கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பறை ஏற்கனவே உள்ளதாகவும், சமையலறை கட் டிக் கொடுக்க வேண்டும் என, தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டதால், இரு பள்ளிகளிலும் கழிப்பறைக்கு பதிலாக சமையலறை கட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்னை பற்றி, கடந்த 6ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். ஏற்கனவே கழிப்பறை இருக்கும்போது, ஏன் கழிப்பறை கட்ட டெண்டர் விடப்பட்டது என கேள்வி எழுப்பினர். கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், கவுன்சிலர்கள் சரஸ்வதி, சுரேஷ் ஆகிய இருவரும், கழிப்பறை, சமையலறை தொடர்பான இரு தீர்மானங்களையும் தள்ளி வைத்து, பணியின் பெயரை மாற்றி வேறு டெண்டர் கோர வேண்டும் என, கமிஷனருக்கு, நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளனர்.