உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நவ., 15க்குள் பயிர் காப்பீடு விவசாயிகள் பதிவுக்கு கெடு

நவ., 15க்குள் பயிர் காப்பீடு விவசாயிகள் பதிவுக்கு கெடு

காஞ்சிபுரம்: 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், நவம்பர் 15க்குள் காப்பீடு செய்ய வேண்டும்' என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டு சம்பா பருவ சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கு, பிரதமரின் பயிர் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்ய, 464 கிராமங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நெல் பயிருக்கான விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை உள்ளது. எனவே, சம்பா பயிரிடும் விவசாயிகள் வரும் நவ., 15க்குள், ஏக்கருக்கு 545 ரூபாய் பிரிமியம் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய முன் மொழிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில், விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்பளவு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து, காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி