ஓணகாந்தேஸ்வரர் கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில், மூன்றாவது தலமாக விளங்கி வருகிறது.சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தர மூர்த்தி நாயனார், இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால், பொன் பொருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில் அருகில் உள்ள தெப்பக்குளம் முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.எனவே, இக்குளத்தையும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை சீரமைக்கவும், ஹிந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.