குமரகோட்டம் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் மற்றும் உட்பிரகார சன்னிதியை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, திருப்பணி துவக்குவதற்கான பாலாலயம் கடந்த ஆண்டு பிப்., 26ல் நடந்தது. இதைஅடுத்து ராஜகோபுரம், கந்தபுராண மண்டபம், ரிஷி கோபுரம் உள்ளிட்ட திருப்பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது.திருப்பணி துவக்கப்பட்டு 15 மாதங்கள் ஆன நிலையில், எந்தவொரு திருப்பணியும் முழுமை பெறவில்லை. திருப்பணி நடந்து வருவதால், இக்கோவிலில் கடந்த இரு ஆண்டுகளாக வைகாசி விசாக பெருவிழா நடைபெறவில்லை. எனவே, திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது:இக்கோவில் செயல் அலுவலராக ஐந்து மாதத்திற்கு முன்புதான் பொறுப்பு ஏற்றேன். திருப்பணியை தீவிரப்படுத்தி உள்ளேன். ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், எஞ்சியுள்ள திருப்பணி முழுதையும் முடிக்க திட்டமிட்டு பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.