குறைவான ஓட்டு வாங்கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த தி.மு.க., அறிவுரை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில், குறைவாக ஓட்டு வாங்கிய இடங்களில் அரசு திட்டங்கள் பற்றி எடுத்து கூற, தி.மு.க., மண்டல பொறுப்பாளரான அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்காக முன்கூட்டியே, தி.மு.க., களம் இறங்கி பணியாற்ற துவங்கி விட்டது. மண்டலம் வாரியாக பிரித்து, அமைச்சர்கள் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நியமிக்கப்பட்ட பின் காஞ்சிபுரத்தில் முன்னதாக ஒரு அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தனியார் நட்சத்திர ேஹாட்டலில், நேற்று முன்தினம், அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், தெற்கு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளுக்கான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. அமைச்சர் காந்தி, மாவட்ட செயலர் சுந்தர், எம்.பி.,செல்வம், எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு மண்டல பொறுப்பாளர் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சியினருக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வழங்கினார். கடந்த தேர்தலின்போது, தி.மு.க., எந்தெந்த ஒட்டுச்சாவடிகளில் எல்லாம் குறைவான ஓட்டுகளை பெற்றதோ, அப்பகுதிகளில் கடுமையாக உழைத்து, அங்கு அரசு திட்டங்கள் பற்றி எடுத்து கூற கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசு திட்டங்களை கூறி, இப்போதே பிரசார பணிகளில் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
சில இடங்களில் சிக்கல்
கிராம வாரியாக அரசு திட்டங்களை எடுத்து கூற அமைச்சர் அறிவுறுத்திய நிலையில், பரந்துார் விமான நிலைய திட்டம் அமையும்,20 கிராமங்களில் தி.மு.க., நிர்வாகிகளால் அரசு திட்டங்களை எடுத்து கூறவும், கிராமப்புறங்களில் பிரசாரம் செய்யவும் ஆளுங்கட்சியினர் தயங்குகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலின்போதே, பரந்துார் சுற்றிய கிராமங்களில் அரசியல் கட்சியினர் பெரிதளவில் பிரசாரமே செய்யவில்லை. இந்நிலையில், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருப்புலிவனம் அருகே புதிதாக சிப்காட் அமைவதால், அங்கேயும் ஆளுங்கட்சி மீது கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மருதம், திருப்புலிவனம் உள்ளிட்ட, 10 கிராமப்புறங்களில், சிப்காட்டிற்கு நில எடுப்பு செய்ய திட்டமிட்டிருப்பதால், தி.மு.க., மீதான அதிருப்தி அங்கேயும் உள்ளது. அப்பகுதியிலும், அரசு திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்வது ஆளுங்கட்சிக்கு சிக்கல் உள்ளது.