பராமரிப்பின்றி சீரழியும் பூங்கா புதரில் மறையும் உபகரணங்கள்
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகரில், கடந்த 2011ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.பூங்காவில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள 'டைல்ஸ்' பதித்த நடைபாதை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, அமரும் இருக்கை, அழகிய மலர் செடிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது.முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் செடி, கொடிகள் புதர்போல மண்டிள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.மேலும், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பூங்காவில் மது அருந்துவிட்டு, காலி மதுபான பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை வீசி செல்கின்றனர். இதனால், பூங்காவிற்கு வருவோர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.சிறுவர்களுக்கான சீசா விளையட்டு உபகரணம் உடைந்த நிலையில் உள்ளது. சறுக்கு விளையாட்டு உபகரணத்தை சுற்றிலும் புதர்மண்டியுள்ளதால், சிறுவர்கள் விளையாட முடியாத சூழல் உள்ளது.எனவே, பூங்காவில் மண்டியுள்ள புதர்களை முழுமையாக அகற்றி, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கே.எம்.வி., நகர்வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.